நாளை (01) முதல் அமலுக்கு வரவிருந்த வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தின் போது, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய சதவீதத்தை வழங்காமல் நேற்று (29) டீசல் விலையைக் குறைத்ததன் மூலம் அரசாங்கம் பேருந்து உரிமையாளர்களைப் பாரியளவில் ஏமாற்றியுள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
பேருந்துக் கட்டணங்கள் மீதான தேசியக் கொள்கையின்படி தங்களுக்குப் போதுமான கட்டண உயர்வு வழங்கப்படாவிட்டால், சட்ட நடவடிக்கை மூலம் தேசியக் கொள்கையிலிருந்து விலக நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்,
எரிபொருள் விலைச்சூத்திரத்தின்படி இன்று (30) செய்யப்பட வேண்டிய டீசல் விலை குறைப்பை, அரசாங்கம் பயத்தின் காரணமாக நேற்றே (29) அவசரமாகச் செய்து முடித்துள்ளது. பேருந்துக் கட்டண உயர்வு சதவீதம் அதிகரித்துவிடும் என்ற அச்சமே இதற்கு முக்கியக் காரணமாகும்.
பேருந்துக் கட்டணங்கள் மீதான தேசியக் கொள்கையின்படி ஜூலை 01 முதல் பேருந்துக் கட்டணங்களில் 20% உயர்வு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திடீர் டீசல் விலை குறைப்பால் தற்பொழுது அது 15% அல்லது 17% ஆகக் குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பேருந்துகள் டீசலில் மட்டும் ஓடுவதில்லை, ஏனைய உதிரிப்பாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன எனச் சுட்டிக்காட்டிய அவர்:
இந்த மோசடி குறித்து நாங்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
அவர்கள் எங்களைத் தவிர்த்துவிட்டுப் பேருந்துக் கட்டணத்தை தன்னிச்சையாக அறிவிக்க முயற்சிக்கிறார்கள்.
எமக்குக் குறைந்தபட்சம் 15% கட்டண உயர்வு வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், ஆரம்பக் குறைந்தபட்சப் பேருந்துக் கட்டணம் 35 முதல் 40 ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
புதிய பேருந்துக் கட்டணத் திருத்தம் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதை ஆராயப் பேச்சுவார்த்தை ஒன்றிற்குத் தாம் கோரிக்கை விடுத்த போதிலும், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (NTA) அதற்கு அனுமதி வழங்கவில்லை என அவர் சாடினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் அனைவரையும் ஏமாற்றி வருகிறது.
தாங்கள் செய்வதே சரி என்ற மனப்போக்கில் அரசு இன்னும் செயல்படுகிறது.
தேசியக் கொள்கையின்படி எமக்கான உரிய பேருந்துக் கட்டண உயர்வு நாளை வழங்கப்படாவிட்டால், நாம் நீதிமன்றத்தை நாடுவோம்.
சட்ட நடவடிக்கை மூலம் பேருந்துக் கட்டண தேசியக் கொள்கையிலிருந்து முழுமையாக விலகுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என ஜெமுனு விஜேரத்ன மிகவும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.














