டெல்லியில் நடைபெறவுள்ள 16 ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி இன்று (01) டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
அனைவரையும் வரவேற்க புது டெல்லியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறவுள்ள தனது மூன்று நாள் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணத்திற்காக, டகாயிச்சி இன்று மாலை தலைநகரை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணம் இதுவாகும்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தப் பயணத்தின்போது ஜப்பானியப் பிரதமர் 16-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பார்.
தகாயிச்சியின் இந்தியப் பயணம் முதலீடு மற்றும் புத்தாக்க வாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும், அத்துடன் குறைக்கடத்திகள் (semiconductors) மற்றும் முக்கிய கனிமங்கள் போன்ற துறைகளில் உறுதியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு இந்தியாவை இணைக்கும் வகையிலான “தொழில்துறை மதிப்புச் சங்கிலி” (Industrial Value Chain) ஒன்றை உருவாக்குவதிலும் இப்பயணத்தின்போது கவனம் செலுத்தப்படும் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
16-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் ஜப்பானியப் பிரதமர் பங்கேற்பது, இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மறுஆய்வு செய்து வலுப்படுத்தவும், பரஸ்பர அக்கறைக்குரிய பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காகப் பிரதமர் மோடி 2025 ஆகஸ்ட் மாதம் டோக்கியோவிற்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து இந்தப் பயணம் அமைகிறது.
மேலும், இந்தியா-ஜப்பான் இடையிலான ‘சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை’ மேலும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் உள்ள கூட்டு அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.
















