பயாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுகுருந்த பகுதியில் காலி-கொழும்பு பிரதான வீதியில் நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸர் குறிப்பிட்டனர்.
குறித்த குடும்பத்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி, தனியா பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருவளையில் நடைபெற்ற பொசொன் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் 62 வயதுடைய மூதாட்டி மற்றும் அவரது 12 வயதுடைய பேரனும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும், களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
அத்துடன், முச்சக்கர வண்டியின் சாரதியான ஒரு முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது; அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு பெண் பயணிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.
இந்த விபத்து குறித்து பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














