ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை படுகொ*லை செய்ய முயற்சித்தால் அல்லது அத்தகைய செயலில் ஈடுபட்டால், அமெரிக்க இராணுவம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அனைத்துப் பகுதிகளையும் “முற்றிலும் அழித்து சிதைக்கும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கை நீடிக்காது என்ற நம்பிக்கையைத் தகர்த்துள்ள சூழலிலும், முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, தாக்குதல் ஒன்றில் அலி கமேனி கொ*ல்லப்பட்டார். அவருக்குப் பின் அவரது மகன் மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் தனது பதிவில், “ஈரானிய அரசாங்கம் உலகம் முழுவதும் பல இடங்களில் விடுத்துள்ள அச்சுறுத்தலின்படி, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை படுகொ*லை செய்ய முயற்சித்தால், 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரானை இலக்கு வைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகத் தாக்குதல் நடத்தும். கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன, அமெரிக்க இராணுவம் தயாராகவும், விருப்பத்துடனும், அதற்கான திறனுடனும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுத் திரும்பும் வழியில், பிரித்தானிய இராணுவத் தளம் ஒன்றில் வைத்து ட்ரம்ப் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தை மாற்றிக்கொண்டார்.
பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பின்னர், பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, “இல்லை, ஏன் அவ்வாறு இருக்க வேண்டும்?” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
ஈரானிடமிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு ஏதேனும் நம்பகமான அச்சுறுத்தல் உள்ளதா என்று கேட்டதற்கு, “எனக்கு எப்போதும் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அவர்களது பட்டியலில் நான் முதலிடத்தில் இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
ட்ரம்ப் ஏற்கனவே பலமுறை படுகொலை முயற்சிகளுக்கு இலக்காகியுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலின் போது, தன்னை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக பைடன் நிர்வாக அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக ட்ரம்பின் பிரச்சாரக் குழு கூறியிருந்தது.
இஸ்ரேல், ஈரானின் புதிய சதித்திட்டம் குறித்து ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்ததாக இந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















