முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து, பின்னர் அவற்றை மீண்டும் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
யக்கலாவைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
40 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட வேன் ஒன்றை, துப்பாக்கி ஏந்திய குழு ஒன்று திருடிவிட்டதாக, ஜூலை 1-ஆம் திகதி அன்று ஐ.ஜி.பி. நிவாரணப் பிரிவில் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, பெலும்மஹாராவில் உள்ள ஒரு வாகன விற்பனையகத்தின் உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 13-ஆம் திகதி யக்கலவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள், வாகனங்களை விற்பனை செய்வதற்காக முகநூலில் விளம்பரங்களை வெளியிட்டு, அவற்றை விற்ற பின்னர் , திட்டமிட்டு அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து கொள்ளையடித்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகன விற்பனையக உரிமையாளரும், ஏனைய சந்தேக நபர்களும் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
நித்தம்புவ பொலிஸ் பிரிவின் கலகெதிஹேன பகுதியில் உள்ள வாகன விற்பனையக உரிமையாளரிடமிருந்து 02 வாள்கள், 02 கைத்துப்பாக்கி, 03 தோட்டாக்கள் மற்றும் ஒரு ஜீப் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதேபோன்ற மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் அவர்கள் மீது புகார்கள் பெறப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.













