கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள், பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. குறித்த கூட்டத்தில் விவசாயம் தொடர்பில் ஆரயப்பட்டது. இதன்போது கிளிநொச்சி திருவையாறு பகுதியில் விவசாய செய்கை தேசிய வேலைத்திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சாட்டினார்.
குறித்த விடயம் தொடர்பில் விமர்சன கருத்துக்களை முன்வைத்த அர்ச்சுனா இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் காரணமாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட வருகை தந்திருந்த அதிகாரிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் செளியேறினர். இதனால் குறித்த அபிவிருத்திக்குழு கூட்டம் அதிகாரிகளின் வெளியேற்றத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது











