உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து இந்தியாவின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், விளக்கம் கோரவும் புது டெல்லியில் உள்ள ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளர் விளாடிமிர் லடானோவை வெளியுறவு அமைச்சகம் வரவழைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேன் கடற்கரைப் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த வணிகக் கப்பல் ஒன்றில் பணிபுரிந்த நான்கு இந்தியர்கள் அண்மைய தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரேன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து, இந்தியா தனது தீவிர கவலையை ரஷ்யத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாகவும், நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை 19 அன்று மாலை உக்ரேனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டபோது, கினியா-பிசாவு நாட்டின் கொடியை ஏந்திய சரக்குக் கப்பலான ‘எம்வி கோல்டன் லியோ’ (MV Golden Leo) தாக்கப்பட்டதில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்திய மறுநாளே இந்த இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தானியங்களை ஏற்றிச் சென்ற அக் கப்பலில், ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர்.















