இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி புது டெல்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது, காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
நேற்று (22) பிற்பகல் போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் தடியடிகளையும் பயன்படுத்தியது.
ஏறக்குறைய 20 லட்சம் மாணவர்களைப் பாதித்த தேர்வுத் தாள்கள் கசிவுக்குக் காரணமான கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட “கரப்பான் பூச்சி இயக்கம்” அமைப்பைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், மத்திய புது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் போராட்டத் தளத்தில் திரண்டுள்ளனர்.
2014-ல் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்த போராட்டம் அவருக்கு எதிரான மிகப்பெரிய இளைஞர் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த இளைஞர் இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, இந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரையும் எதிர்க்கட்சிகள் சீர்குலைத்து வருகின்றன.
ஊரடங்கு உத்தரவை மீறி, பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திங்களன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அவர்களைக் கலைக்க காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் தடியடிகளையும் பயன்படுத்தினர்.
அதன்படி, பிற்பகலுக்குள், ஜந்தர் மந்தரில் 10,000-க்கும் மேற்பட்டோர் இந்திய தேசியக் கொடியை அசைத்தபடியும் கோஷங்களை எழுப்பியபடியும் கூடியிருந்தனர்.
பின்னர், அந்தக் கூட்டம் சுற்றியுள்ள சாலைகளுக்கும் பரவியதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சில போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு காவல்துறையினரைத் தாக்கியதில், பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
தற்போது நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, புது டெல்லியின் மையப்பகுதியில் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு கேலிச்சித்திர இணைய இயக்கமாகத் தொடங்கிய ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP), பின்னர் ஒரு சக்திவாய்ந்த இளைஞர் அமைப்பாக உருவெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை தனது போராட்டம் ஓயாது என்று CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் போராட்டக்காரர்களுடன் இணைந்து, மோடியின் இல்லம் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி அமைச்சரின் பதவி விலகல் விஷயத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும், எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
போராட்டக்காரர்களின் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு, மோடி அரசு CJP தலைவர்களுடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அதில், தேர்வு முறையைச் சீர்திருத்துவதாகவும், இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
















