கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது அங்கு இருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் காட்டை அழிப்பதற்குப் பயன்படுத்திய இயந்திரமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















