இந்தியாவின் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியைப் பாராட்டியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்தி, சர்வதேச திறமையாளர்களை ஈர்க்கும் மையமாக இந்நாடு உருவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெற்ற விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடனான (CEO) கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
புதுமையான துறைகளில் அபார திறமையையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியுள்ள இந்திய இளைஞர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையே நாட்டின் நிலையான முடிவுகளுக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியர்களிடம் இயல்பாகவே ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறன் அதிகம் இருப்பதால் விண்வெளித் துறையில் குறுகிய காலத்தில் தனித்துவமான இடத்தை உருவாக்க முடிந்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
வழக்கமான பயன்பாடுகளுக்கு அப்பால் சிந்தித்து, அன்றாட சமூகச் சவால்களுக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஏற்ற தொழில்நுட்ப வழிகளைக் கண்டறியுமாறு பிரதமர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரிய திருப்புமுனைகளை இந்திய நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ‘இந்தியாவிற்கு வாருங்கள், இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணையுங்கள்’ என உலகளாவிய விண்வெளி அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கும் நிலைக்கு இந்திய நிறுவனங்கள் வளர வேண்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

















