ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது.
அதேவேளையில், வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகளைத் தங்கள் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்த்து நிற்பார்கள் என்றும் தெஹ்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் திங்களன்று (24) புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.
இருப்பினும், ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் டொலர் சார்ந்த நிதி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்த அவர், மிகக் கடுமையான தடைகளை விதிப்பதிலிருந்து மட்டும் விலகி நின்றார்.
புதிய உத்தரவுக்கு இணங்குவதற்கு அவகாசம் அளிப்பதாகக் கூறிய பெசென்ட், எந்தெந்த நாடுகள் குறிவைக்கப்படும் என்பதையோ அல்லது தடைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதையோ தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இருப்பினும் வொஷிங்டனின் திறைசேரியத் திணைக்களம் 60 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது புதிய தடைகளை அறிவித்தது.
ஆனால், ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவுவதாகச் சந்தேகிக்கப்படும் சீன நிதி நிறுவனங்கள் எதுவும் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்தச் செய்தி வெளியாவதற்கு முன்னதாக, அமெரிக்காவின் எந்தவொரு பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பதிலடியாக, இராணுவ ரீதியான நடவடிக்கை மற்றும் வளைகுடாப் பகுதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் குறைத்தல் ஆகிய இரண்டையும் மேற்கொள்வதாக தெஹ்ரான் எச்சரித்திருந்தது.
அவை அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம் என்று ஈரானின் பொருளாதார அமைச்சர் அலி மதானிசாதே கூறினார்.
இது தொடர்பில் அரசு தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய அவர்,
இயற்கையாகவே, எதிரிகள் நம் மீது ஒரு பொருளாதார பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுக்க எண்ணுகிறார்கள், ஆனால் எங்களிடமும் எங்களுடைய சொந்த வழிமுறைகள் உள்ளன.
இந்த ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளை சீனாவோ ரஷ்யாவோ ஏற்காது, ஏனைய நாடுகளும் அவற்றை எதிர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், ஈரானின் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன்களுக்கும் எரிசக்தித் தடைப் பகுதிகளுக்கும் கடுமையான அடிகள் கொடுக்கப்படும் என்று தெஹ்ரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி சூளுரைத்துள்ளார்.
ஈரானும் அமெரிக்காவும் ஜூன் மாதம் ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, ஆனால் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அறியப்படும் அது, விரைவில் தடம் புரண்டது.
மோதல் மேலும் தீவிரமடைவதைத் தடுத்தல் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய, தெஹ்ரானுடனான அண்மைய பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.













