அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை நிர்வகிப்பது குறித்து தனது அண்டை நாடான ஓமனுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் போர் தொடங்குவதற்கு முன்பு உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாண்ட இந்த முக்கியமான நீர்வழிப்பாதையில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து, ஈரானும் ஓமனும் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
அப்போதிருந்து பெரும்பாலான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த நீரிணை வழியாக “கூட்டு தற்காலிகப் போக்குவரத்துப் பாதை” ஒன்றை அமைப்பது குறித்து விவாதித்ததாகவும், அப்பாதையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற ஒப்புக்கொண்டதாகவும் இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தன.

இதனிடையே, நீரிணையில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் கூறினார்; இது அவர் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடி மோதல்கள் பெருமளவு தணிந்திருந்தாலும், அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான தூதரக முயற்சிகள் முடங்கியுள்ளன.
மேலும், அந்த நீர்வழிப் பாதை வழியாகச் செல்வது இப்போதும் ஆபத்தானதாகவே உள்ளது.
நீரிணையின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஓமானின் ‘அஷ் ஷிஷா’ (Ash Shishah) பகுதிக்கு வடகிழக்கே சுமார் 9 கடல் மைல் (17 கி.மீ) தொலைவில், அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணை அல்லது பொருள் தாக்கியதில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று செயலிழந்ததாக ‘யுகே மாரிடைம் டிரேட் ஆபரேஷன்ஸ்’ (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ட்ரம்ப்பின் இளைய மகன் பாரனைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி பற்றித் தங்களுக்குத் தெரியும் என்று அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு (U.S. Secret Service) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட மூன்று நிமிடக் காணொளி ஒன்றில், 20 வயதான பாரன் ட்ரம்ப் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரைக் கொல்பவர்களுக்கு 10 மில்லியன் டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அவரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.
















