இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவை நிகழ்ச்சித் தொடரின் கீழ் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்ததான முகாம் இன்று (03) ஹட்டன் தலைமையக பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது.
காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான இரத்தத்தை வழங்கி மனிதாபிமான பணியில் பங்களிப்புச் செய்வதாகும்.
சட்டம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கும் நிறுவனமாக மட்டுமன்றிஇ பொதுமக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவர்களுடன் நெருக்கமாகச் செயற்படும் நிறுவனமாகவும் பொலிஸார் செயற்படுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்இ இதன் மூலம் பொலிஸாருக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் கொட்டகலை இராணுவ முகாமின் பிரிகேடியர் சாகர பெரேரா ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்கள் பாதுகாப்புக் குழு ஆலோசனைச் சபையும் ஹட்டன் தலைமையக பொலிஸாரும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு குடாகம ‘ரிவிசந்த’ மகளிர் சங்கம் தீவிர ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.














