220 கிலோ வோல்ட் மற்றும் 132 கிலோவோல்ட் உயர் மின்னழுத்த மின்பரிமாற்றக் கம்பிகள், மின்கோபுரங்கள் மற்றும் மின்வலையமைப்பு உப நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்குநர் நிறுவனம் (NSO) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக NSO வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பட்டங்களும் அவற்றின் நூல்களும் மின்பரிமாற்றக் கம்பிகளில் சிக்கிக்கொள்வதால் மின் கோளாறுகள் ஏற்பட்டு, பல சந்தர்ப்பங்களில் மின்பரிமாற்றக் கோடுகள் தானாகவே செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்ட பட்டங்களையும் நூல்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கையால் அகற்ற வேண்டிய நிலை ஏற்படுவதால், மின்சார அமைப்பின் செயல்பாடுகளுக்கு கூடுதல் அழுத்தம் உருவாகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தேசிய மின்சார வலையமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும் என NSO எச்சரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி இடம்பெற்ற இதேபோன்ற ஒரு சம்பவம் தேசிய மின்சார அமைப்பின் நிலைத்தன்மையை பாதித்ததாகவும், அவசர நடவடிக்கையாக பல மின் விநியோகப் பகுதிகளின் இணைப்புகளை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில நுகர்வோருக்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேசிய மின்சார அமைப்பு தடையின்றி இயங்குவதற்காக பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ள NSO, உயர் மின்னழுத்த மின்கம்பிகள், மின்கோபுரங்கள் மற்றும் உப நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.














