நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளத்தில் குறைந்தது 2.56 பில்லியன் அமெரிக்க டொலர் (387.5 பில்லியன் நேபாள ரூபாய்) பெறுமதியான சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் இன்று (04) தெரிவித்தார்.
மீட்புப் பணிகளின் ஆரம்பகட்டமான முதல் நான்கு மாதங்களில், சாலைகள் மற்றும் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்தல், குடிநீர் வழங்குதல் மற்றும் மின்சார வசதியைச் சீரமைத்தல் ஆகியவற்றிற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 52.6 மில்லியன் டொலர்களாக இருக்கும் என்று தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்ம ராஜ் உப்ரெட்டி குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20,000 வீடுகளை நேபாளம் மீண்டும் கட்ட வேண்டியிருக்கும் என்றும், அவற்றில் குறைந்தது 7,500 வீடுகள் முழுமையாக அழிந்துவிட்டன என்றும் உப்ரெட்டி கூறினார்.
ஆகஸ்ட் 26 அன்று, சீனாவுடனான நேபாளத்தின் எல்லைப் பகுதியில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால், பனி, பாறைகள் மற்றும் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு திரிசூலி ஆற்றில் பாய்ந்தோடியது.
இதனால் பல நகரங்களும் கிராமங்களும் அழிந்ததோடு, 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் 4,200-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














