அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இந்த இரு சந்தேகநபர்களும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று (03) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அசோகபுர, துன்கன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய திசாநாயக்க முதியான்சேலாகே பந்துல திசாநாயக்க மற்றும் கொழும்பு பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சியம்பலாதுவ பத்திரணலாகே ஹர்ஷ குமார ஆகியோராவர்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அவை இலக்குகளைத் தாக்கி வெடிக்கும் காட்சிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இவர்கள் இருவரும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இவ்வாறு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10.15 மணிக்கு எத்தியாட் விமான சேவைக்குச் சொந்தமான EY-392 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரு சந்தேகநபர்களையும் பொறுப்பேற்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவர்களிடம் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பந்துல திசாநாயக்க என்பவர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவராவார்.
“பரேவி சுதா” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளியான ஹர்ஷ குமார என்பவர், முன்னர் பூஸா சிறைச்சாலையில் அமைதியற்ற முறையில் ஈடுபட்ட சம்பவத்துடனும் தொடர்புடையவராவார்.
ஆரம்பக் கட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பந்துல திசாநாயக்க கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடமும் (TID), ஹர்ஷ குமார கொழும்பு தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.














