உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (MISA) குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (08) சபாநாயகரின் அறைக்கு வெளியே திராவிட முன்னேற்றக் கழகம் அமர்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது.
அதனைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகள் குறித்த விவரங்களை வாசித்தது சட்டமன்ற மரபை மீறும் செயல் என்று கூறி, முதலமைச்சரின் கருத்துகளுக்கு திமுக எம்.எல்.ஏ. ஈ.வி. வேலு ஆட்சேபம் தெரிவித்தார்.
அமளிக்கு மத்தியிலும் சபாநாயகர் அவருக்குப் பேச அனுமதி அளித்தார்.
” வழக்கு விவரங்களை வாசிப்பது மரபை மீறும் செயலாகும். நேற்று முதலமைச்சர் மிசா (MISA) மற்றும் சர்க்காரியா ஆணையம் குறித்துப் பேசியிருந்தார். முதலமைச்சரின் பதிலுரையின்போது ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்பான வழக்குகளை வாசிப்பது மரபு மீறலாகும். விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்துக் கருத்து தெரிவிக்கக் கூடாது,” என்று வேலு கூறினார்.
எனினும் சட்டமன்ற நடவடிக்கைகளிலிருந்து MISA சட்டம் குறித்த விஜய்யின் கருத்துகளை நீக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நிராகரித்தார்.
“நேற்று முதல்வர் விஜய்யின் உரையை ஒரு நிமிடம் கூடக் கேட்க திமுக தயாராக இல்லை. MISA சட்டம் தொடர்பாக ஏற்கனவே அவையில் குறிப்பிடப்பட்ட விடயங்களையே முதல்வர் விஜய்யும் குறிப்பிட்டார். எனவே, MISA சட்டம் குறித்த முதல்வரின் உரையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை,” என்று சபாநாயகர் கூறினார்.
இந்த நிலையிலேயே சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

சட்டமன்ற நடவடிக்கைகளின்போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற மறுநாளே இந்த மோதல் ஏற்பட்டது.
முந்தைய திமுக அரசு மீது விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாகப் பதிலளிக்க அனுமதிக்கப்படாததைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தனது உரையின் போது, விஜய் அமுலாக்கத்துறை ஆவணங்கள், அரசு ஆணையம் மற்றும் முந்தைய திமுக ஆட்சிக்காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், காவல்துறை காலிப்பணியிடங்கள், நவீனமயமாக்கல், டிஜிட்டல்மயமாக்கல், குற்றத் தடுப்பு மற்றும் காவல்துறையில் அரசியல் தலையீட்டைக் குறைப்பது குறித்தும் பேசினார்.
திமுக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், அவற்றிற்கான ஆதாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
தாங்கள் பேச முற்படும்போதெல்லாம் திமுகவினர் தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று குற்றம் சாட்டினார்.













