ஓல்ட் டிராஃபோர்டில் சனிக்கிழமை (19) நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், 125 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்து அணி வெறும் 9.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டியில் ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை விளாசினார்.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்டி டி:20 தொடரினை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
இந்த முழுமையான வெற்றியின் மூலம், ஐசிசி ஆடவர் டி:20 சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை இந்தியாவிடமிருந்து இங்கிலாந்து மீண்டும் கைப்பற்றியது.
அதேவேளையில், இவ்வகையான போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை தனது தொடர்ச்சியான 15 ஆவது தோல்வியைச் சந்தித்தது.
நேற்றைய போட்டியில் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தை முன்னின்று நடத்தினர்.
இவர்கள் வெறும் 39 பந்துகளில் 85 ஓட்டங்கள் கொண்ட கூட்டணியை அமைத்தனர்.
பவர்பிளே (powerplay) முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்களை குவித்ததன் மூலம், போட்டியின் முடிவு குறித்த எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் போனது.
ப்ரூக் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார்.
அதேவேளையில் பட்லர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, ஸ்கொயர் லெக் திசையில் அடித்த சிக்ஸர் மூலம் வெற்றி இலக்கை எட்டினார்.
இத்தொடரின் இரண்டாவது போட்டியில் 15,000 டி:20 ஓட்டங்களை கடந்த சாதனையை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, இந்த இன்னிங்ஸை அவர் வெளிப்படுத்தினார்.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தபோது 62 பந்துகள் மீதமிருந்த நிலையில், தரிந்து ரத்நாயக்கேயின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த மற்றொரு இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் அநியூரின் டொனால்ட் ஆவார்.
முன்னதாக, இங்கிலாந்தின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் அழுத்தத்திற்கு உள்ளான இலங்கை, இணைப்பாட்டத்தை அமைக்கத் திணறியது.
பத்தும் நிஸ்ஸங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆரம்பத்தில் ஒரு உத்வேகத்தை அளித்தார், அதே நேரத்தில் கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
இருப்பினும், அந்த ஜோடியைச் சுற்றி விக்கெட்டுகள் சீராக வீழ்ந்ததால், இலங்கை ஒரு சவாலான மொத்த ஓட்டங்களை எடுக்க முடியவில்லை.
அவர்கள் எடுத்த 124 ஓட்டங்கள், 2018-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஓல்ட் டிராஃபோர்டில் பதிவான மிகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் டி:20 வடிவ ஓட்ட எண்ணிக்கையாகும்.
‘ஆட்ட நாயகன்’ விருது வென்ற பேக்கர், 3.5 ஓவர்களில் 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது டி20 சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் சிறப்பான தொடர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அவர் இத்தொடரை 6.58 என்ற எகானமி ரேட் (economy rate) மற்றும் மொத்தம் 6 விக்கெட்டுகளுடன் நிறைவு செய்தார்.
ஆர்ச்சர் 23 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும், ஜாக்ஸ் 31 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
லியாம் டாசன் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டை எடுத்த நிலையில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் சிறந்து விளங்கினர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஓட்டக் குவிப்பைக் கட்டுப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், நிசங்காவும் மெண்டிஸும் மட்டுமே இலங்கை தரப்பில் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்திய துடுப்பாட்ட வீரர்களாகத் திகழ்ந்தனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்டத் தடுமாற்றம் அணித் தலைவர் சரித் அசலங்காவின் ஆட்டத்திலும் எதிரொலித்தது; அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் முறையே 16, 31 மற்றும் 10 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.
அவரது இந்த மோசமான ஆட்டத்திறன், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்த அணியின் டி20 சர்வதேச ஆட்டத்திறன் குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களின் பங்களிப்புடன் இங்கிலாந்து அணி ஒரு ஆதிக்கமிக்க தொடரை நிறைவு செய்தது.
இதில் பேக்கரின் சிறப்பான ஆட்டம் அவர்களின் வேகப்பந்துவீச்சுப் பிரிவில் மற்றொரு கூடுதல் தேர்வையும் வழங்கியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டெம்பர் 22 ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













