ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி ஒன்று, லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று அதிகாலை (23) இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார்.
மீகமவத்தை, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞனின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.















