தூத்துக்குடியில் 1119.67 கோடி இந்திய ரூபாய் செலவில் 114 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாயின் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். மேலும், கார் முதல் விற்பனை தொடக்க விழாவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கனிமொழி எம்.பி. , வின்பாஸ்ட் கார் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















