சமூக வலைத்தளங்கள் உலக மக்கள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் இளைய சமூகத்தினர் மத்தியில் இன்ஸ்டாகிராம் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது .
வட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை விட இன்ஸ்டாகிராம்தான் அதிக அளவில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது.
இன்ஸ்டாகிரம் செயலியை பயன்படுத்தாதவர்களே மிக குறைவு என்று சொல்லும் அளவுக்கு அனைவர் மத்தியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலமாக உள்ளது.
அதன்படி, இந்தியாவில் 43 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதுடன்
அமெரிக்காவில் இந்தியாவை விட பாதிக்கு பாதி குறைவாக 17 கோடி பேர் மட்டுமே இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் முதல் இடத்தில இந்தியாவும் இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் இருக்கின்றன.
பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதிய அப்டேடுகளையும் பயனாளர்களுக்கேற்ப அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய மாற்றத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
அதாவது, இன்ஸ்டாகிராமில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது.
இதனால் இனிமேல், குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும்.
இதுவரையான காலம் வரை அனைத்து பயனரும், லைவ் வசதியை பயன்படுத்தும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அனுமதித்திருந்த நிலையில் இனி அது மாற்றமடைந்துள்ளது.




















