ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல நாடுகளின் தலைவர்களையும், உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அந்த சந்திப்புக்களின் விபரம் பின்வருமாறு:
ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதி, இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள பிரதிநிதி மற்றும் வெள்ளை மாளிகை ஜனாதிபதி பணிக்குழாம் பணிப்பாளர் செர்ஜியோ கோர் (Sergio Gor) உடனான சந்திப்பு அமெரிக்க நேரப்படி நேற்று (23) பிற்பகல் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் வர்த்தக, வாணிப,சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் முக்கியமான துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அந்தத் துறைகளை மேலும் முன்னேற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.
முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பலமான மக்கள் ஆணையுடனான புதிய அரசாங்கம் என்ற வகையில், பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு வளமான பொருளாதார முன்னுரிமை அடிப்படையில் அமெரிக்காவுடன் ஒரு செயற்பாட்டுடனான மற்றும் மிக நெருக்கமான உறவைப் பேண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் உட்பட, மக்களின் எதிர்காலத்திற்காக பொருளாதாரத்தின் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்குத் தேவையான மறுசீரமைப்பு உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமமின்மையை நிவர்த்தி செய்தல், இருதரப்பு வர்த்தகத்திற்கான தடைகளைக் குறைத்தல், நியாயமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக உறவுகளை உறுதி செய்வதற்காக ஒரு உடன்பாட்டை எட்டுதல் மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன் போது இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று (24) பிற்பகல் நடைபெற்றன.
இதன்போது, பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமோகமாக வரவேற்றதுடன், இலங்கை-பாகிஸ்தான் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று (24) பிற்பகல் நடைபெற்றன.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீசிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியவிற்கு இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் இதன்போது கலந்துரையாடினர். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், புதிய முதலீடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
















