டித்வா புயல் எச்சரிக்கை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை, ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ சவால் விடுத்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிலையில் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வளிமண்டலவியல் திணைக்களம் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை
ஆதரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பிற்கு சவால் விடுக்கின்றோம்.
நவம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் தித்வா புயல் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூரல்களே முன்வைக்கப்படுகின்றன.
அரசியல் நோக்கங்களுக்காக இந்த எதிர்வு கூரல்கள் உதாசீனப்படுத்தப்பட்டால்
காலநிலை தொடர்பில் எதிர்காலத்தில் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமை தோன்றும்.
ஒக்டோர் – நவம்பர் காலத்தில் இந்து சமுத்திரத்தில் வழமையாக ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பிலேயே 13ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
18ஆம் திகதி குறித்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவிழந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
மாறாக அந்த சந்தர்ப்பத்தில் ‘தித்வா’ என்ற பெயர் கூற குறிப்பிடப்படவில்லை.
எமது வளிமண்டலவியல் திணைக்களம் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் அதனை அவதானித்து,
அதன் தாக்கம் கடற்பிராந்தியத்திலேயே அதிகமாகக் காணப்படும் என எச்சரித்தது.
அந்த எச்சரிக்கையை பின்பற்றியமையால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள முடிந்தது.
25ஆம் திகதியின் பின்னரே மூன்றாவது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஓரளவு முன்னாயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.
27ஆம் திகதி காலை வேளையின் பின்னரே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று சூறாவளியாக மாற்றமடைந்தது.
அதன் பின்னரே அது ‘தித்வா’ எனப் பெயரிடப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களுக்கமைய மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டிருந்தன.
அவ்வாறு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த பெரும்பாலான பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறவில்லை.
சில பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பு படையினரால் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என அனைத்தும் தமது கடமைகளை சரிவர செய்துள்ளன.
எவ்வாறிருப்பினும் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்காக எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த ஒரு புயலால் 1242 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தளவு எண்ணிக்கையிலான மண்சரிவுகள் ஒருபோதும் பதிவாகவில்லை.
உயிரிழப்புக்களை தடுக்க முடியாது போனமைக்கு இதுவே காரணமாகும்.
எனவே இந்த சம்பவத்தை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது என தெரிவித்தார்.
















