முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் மீதான மேலதிக விசாரணை பெப்ரவரி 16 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு தவறான தகவல்களை வழங்கியதாகவும், செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் வசித்ததாகவும் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று கொழும்பு கூடுதல் நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கில், சாட்சியங்களை மேலும் விசாரிப்பதற்கான அடுத்த விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் மீது ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் சிஐடி வழக்குப் பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.













