பரம்பரை பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றி வந்தவர்களை மக்கள் இன்று ஓரம்கட்டி வைத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
நேற்று மாலை (26) மாலை ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி,
மலையகத்தில் கடந்தகால அரசியல் வாதிகளுக்கு மக்கள் முன்னுரிமை வழங்குவதில்லை இவர்களின் அரசியல் பயணம் கேள்விகுறியாக மாறியுள்ளது.
கடந்த வாரங்களில் கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்கட்சியினர்கள் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர், அதேபோல் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாகவும் தவறாக கருத்துக்களை கொண்டு செல்கின்றனர். என தெரிவித்தார்.














