கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்களை இரகசியமாக படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பல பெண் மருத்துவர்கள், தங்கள் அறைகளில் குளிக்கும்போது தொலைப்பேசிகளை பயன்படுத்தி, குறித்த வீரர்கள் படம் எடுத்ததாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டலில் சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட சிசிடிவி காணொளிகளைப் பதிவு செய்ததாகவும் அந்த இரு வீரர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
வீரர்கள் பதிவு செய்த பெண்கள் சம்பந்தப்பட்ட காணொளிகளில் ஏதேனும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா ரூ. 5 லட்சம் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நாரஹேன்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













