சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக பாடசாலையில் இணையும் தரம் ஒன்று மாணவர்கள் மலர்மாலைகளுடன் அன்புடன் வரவேற்கப்பட்டனர். மாணவர்களின் கல்விப் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கில், ஆன்மீக வழிபாடுகளுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இப்பாடசாலைக்கான கல்முனை வலயக்கல்வி அலுவலக இணைப்பாளர் எம்.எம்.எம். றபீக் பிரதம அதிதியாகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நூருல் ஹுதா உமர் கௌரவ அதிதியாகவும், பாடசாலை உதவி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு, புதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஊக்கவுரைகளையும் வழங்கினர். சிறுவர் நட்பு சூழலில் கல்வியை ஆரம்பிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் ஏடும் தொடக்கி வைக்கப்பட்டது.
விழாவின் இறுதியில், தரம் ஒன்று மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) அவர்களினால் விசேட துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் மக்கள் வங்கி சாய்ந்தமருது கிளையினால் மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்குகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

















