வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான தர்மசிறி லியனகே அல்லது “எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை கல்கிஸ்ஸ பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், 25 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 15 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் மொரட்டுவ, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில் “எல்டோ தர்மே” இன் எதிரித் தரப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் அனைத்தும், அவரது நெருங்கிய சகாக்களில் ஒருவரான “துமிந்து” என்பவரின் வழிகாட்டலிலேயே இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஜனவரி 26 ஆம் திகதி மொரட்டுவ பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீது வாள் வீச்சுத் தாக்குதல் நடத்தி அவருக்குப் பாரிய காயங்களை ஏற்படுத்தியதும் இக்குழுவே என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ரத்மலானை மற்றும் அங்குலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.













