இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், ‘அகன்று செல்’ (பGo Away) எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (09) நுவரெலியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் ‘போதைப்பொருள் அற்ற நாடு – மகிழ்ச்சியான நாளை’ என்ற தொனிப்பொருளின் கீழ் ‘ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நுவரெலியாவில் பொது மக்கள் அதிகம் கூடும் இடமாக இருக்கும் நுவரெலியா பிரதான அஞ்சல் நிலைய வளாகம் மற்றும் பிரதான பேருந்து தரிப்பிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நுவரெலியா பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமை தாங்கி, முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர் .
இதன் போது மூன்று மொழிகள் அடங்கிய போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறை அடங்கிய சுவரொட்டிகளும் விநியோகம் செய்தனர் .
செயற்திட்டத்தின் முக்கிய தொனிப்பொருளாக “அகன்று செல்” – போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையிலிருந்து சமூகத்தை விடுவிப்பதை இது குறிக்கிறது.போதைப்பொருள் தொடர்பான புகார்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1818 என்ற இலக்கத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் முதல் படியாக ஊர் முழுவதும் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் இந்தச் செய்தியை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் , பிரதேச செயலகம் ,மாவட்ட செயலகம் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி ஆதரவு தெரிவித்தனர்.















