2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பரீட்சையானது இன்று முதல் 2026 பெப்ரவரி 26 வரை நாடு முழுவதும் 3,545 நிலையங்ளில் நடைபெறும்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகேவின் கருத்துப்படி சாதாரண தரப் பரீட்சைக்காக 33 பிரதேச ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் 531 ஒருங்கிணைப்பு நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக பரீட்சை நிலையங்களின் கண்காணிப்பாளர்கள் உட்பட 30,000 பரீட்சை மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக ரத்மலான, தங்கல்லை, மாத்தறை, சிலாபம், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, கைதடி நபீர் விசேட பாடசாலை, யாழ்ப்பாணம், துன்ஹிந்த வித்தியாலயம் போன்ற இடங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 382,249 பாடசாலைப் பரீட்சார்த்திகள் மற்றும் 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.
சகல பரீட்சார்த்திகளுக்கும் தற்போது அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கும், பெற்ற பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இதுவரை விண்ணப்பப் படிவத்தைப் பெற முடியாதவர்கள், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தேர்வு நிலையத்திற்கு வருவது கட்டாயமாகும்.
மேலும் கடந்த ஆண்டு மொபைல் போன்கள், புளூடூத் சாதனங்கள் போன்றவற்றை தேர்வு மண்டபத்திற்குள் எடுத்துச் சென்று மோசடி செய்ததற்காக சுமார் 30 பரீட்சார்த்திகள் பரீட்சையில் இருந்து தடை செய்யப்பட்டனர் என்பதை பரீட்சைகள் ஆணையாளர் நினைவுபடுத்தினார்.
பரீட்சை முறைகேடுகள் காரணமாக சில சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வில் இருந்து தடை செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.












