வியட்நாம் – இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) நேற்று (16) இரவு வந்தடைந்தது.
அதன்படி, ஹோ சி மின் நகரிலிருந்து VN-671 என்ற விமானமாக இயக்கப்பட்ட ஏர்பஸ் A320 விமானம், நேற்று இரவு 11.02 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதன்போது, விமானத்துக்கு இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் ஏற்பாடு செய்திருந்த நீர்பீரங்கி மரியாதையுடன் தொடக்க விமானம் வரவேற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

குறித்த விமானத்தில் மொத்தம் 164 பயணிகள் வந்திறங்கினர்.
அதேவேளையில், இலங்கையிலிருந்து திரும்பும் விமானத்தில் 172 பயணிகள் வியட்நாமுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
புதிய நேரடிச் சேவையின் கீழ், கட்டுநாயக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான விமானங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் – ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் – இயக்கப்படும்.
ஒவ்வொரு விமானப் பயணமும் ஏறக்குறைய நான்கு மணி நேரம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
இந்த புதிய சேவையைத் தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இலங்கைக்கான வியட்நாமியத் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.













