பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் ஆலயத்திற்குள் திங்கட்கிழமை (17) பக்தர்கள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் பக்தர்கள் ஆவர்.
பீகாரின் பழமையான சிவன் ஆலயங்களில் ஒன்றான அசோக் தாமில் உள்ள இந்திரமனேஷ்வர் ஆலயத்திற்குள் நுழைய முயன்ற பக்தர்களின் கூட்டம் கட்டுப்பாடின்றி மாறியதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் அமைத்திருந்த தடுப்புகள் உடைக்கப்பட்டதால் நெரிசல் மற்றும் மிதிபட்டுக் காயமடையும் சூழல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்து நாட்காட்டியின் புனிதமான ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையன்று, சிவபெருமானை வழிபட ஏராளமான பக்தர்கள் சிவன் ஆலயத்தில் கூடியிருந்தபோது இந்தச் சம்பவம் காலை சுமார் 6.45 மணியளவில் நடைபெற்றது.
அதிகாரிகள் முதற்கட்ட தகவல்களின்படி, ஆலய வளாகத்தில் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி காயமடைந்த பலர் சிகிச்சைக்காக லக்கிசராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அசோக் தாம் ஆலய வளாகத்தில் கடந்த காலங்களில் நெரிசல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
2019 ஆகஸ்ட் 12, அன்று, ஷ்ராவண மாதத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பக்தர் உயிரிழந்தார்.
மேலும் சுமார் 15 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















