காலியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், மழை குறுக்கிட்ட போதிலும், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 460 ஓட்டங்களை குவித்தது.
இதில், அணிக்குத் திரும்பிய நட்சத்திர வீரர் தேவ்தத் படிக்கல் நேர்த்தியாக விளையாடி 167 ஓட்டங்களை குவித்தார்.
அழகிய சூழல் கொண்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மோசமான வானிலை காரணமாக காலை நேர ஆட்டம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால், இலங்கை அணியால் மொத்தம் 43 ஓவர்கள் மட்டுமே பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள முடிந்தது.
காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்குப் பதிலாக ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட படிக்கல், மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.
இலங்கையில் ஒரு இந்திய வீரர் பதிவு செய்த டெஸ்ட் இன்னிங்ஸ்களிலேயே இது நான்காவது அதிகபட்ச தனிநபர் ஓட்டமாகும்.
சச்சின் டெண்டுல்கர் (203), வீரேந்திர சேவாக் (201*) மற்றும் ஷிகர் தவான் (190) ஆகியோர் மட்டுமே இவருக்கு முன்னிலையில் உள்ளனர்.
தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய படிக்கல், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தனது ஆட்டத்தில் 230 பந்துகளை எதிர்கொண்டு, நேர்த்தியான ‘டிரைவ்’ (drive) ஷாட்களை அடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அவரது இந்த இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

இரண்டாம் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்தொடங்கியபோது, இலங்கை புதிய பந்தை எடுத்து, மிகவும் தேவையான விக்கெட்டுகளை வீழ்த்தியது.
அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தில் இருந்து பந்தை நன்கு பிடித்து, மூன்று விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினர்.
அறிமுக சுழற்பந்து வீச்சாளர் கேஷரா நுவந்தாவின் பந்துவீச்சில், சோனல் தினுஷாவிடம் பிடிகொடுத்து ரிஷப் பந்த் (39) ஆட்டமிழந்தார்.
இது கேஷரா நுவந்தாவின் முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும்.
மேலும் அவர், 82 ஓட்டங்களுடன் கே.எல். ராகுலையும் ஆட்டமிழக்கச் செய்தார்.
தசைப்பிடிப்பு காரணமாக முதல் நாளில் 77 ஓட்டங்களுடன் ஆட்டத்தை பாதியில் நிறுத்த வேண்டியிருந்த ராகுல், இரண்டாம் நாளில் கூடுதலாக ஐந்து ஓட்டங்களை மட்டுமே சேர்த்தார்.
பின்னர் பிரபாத் ஜெயசூரிய, நிரோஷன் டிக்வெல்ல மூலம் ஸ்டம்பிங் செய்து படிக்கலின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆறாவது வரிசையில் களமிறங்கிய ஜூரல், 68 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து, படிக்கல் ஆட்டமிழந்த பின்னர் இந்திய அணி சரிவைச் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்தார்.
அவர் ஐந்தாவது விக்கெட்டுக்கு மானவ் சுதருடன் (24 ஓட்டம்) இணைந்து 55 ஓட்டங்களை சேர்த்தார்.
வேகப்பந்து வீச்சாளர் அசித ஃபெர்னாண்டோ ஆட்டத்தின் பிற்பகுதியில் மொஹமட் சிராஜை ஆட்டமிழக்கச் செய்தார்.
இறுதியாக இந்திய அணி இரண்டாம் நாள் போட்டி முடிவில் 460 ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்தது.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும்.
இழக்கப்பட்ட நேரத்தை ஈடுசெய்யும் வகையில், மூன்றாம் நாள் ஆட்டம் 15 நிமிடங்கள் முன்னதாகவே தொடங்கும்.
காலி, தனது 50-வது டெஸ்ட் போட்டியை நடத்துகிறது; இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஆசிய மைதானம் இதுவாகும்.
இலங்கைக்கு எதிராக இந்தியா சிறப்பான சாதனையைக் கொண்டுள்ளது.
2015-க்குப் பின்னர் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா எந்த டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.














