இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்படும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் முதலாவது சுப்பர் 8 போட்டியில் முன்னாள் சம்பியன் பாகிஸ்தானை நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று, இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் தத்தமது குழுக்களில் தலா 3 வெற்றிகளை ஈட்டியதுடன் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தன.
ஏ குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான், இணை உறுப்பு நாடுகளான நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, நமிபியா ஆகிய அணிகளை வெற்றிகொண்டது.
ஆனால், தனது பரம வைரியான இந்தியாவிடம் 61 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இதேவேளை டி குழுவில் தனது முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை இலகுவாக வெற்றிகொண்ட நியூஸிலாந்து, இணை உறுப்பு நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, நமிபியா ஆகியவற்றையும் இலகுவாக வெற்றிகொண்டது.
இத்தகைய சம அளவிலான ஆற்றல்களைக் கொண்ட இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான சுப்பர் 8 போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
















