இங்கிலாந்தில் உள்ள அரசுப் பாடசாலைகளை (Mainstream schools), சிறப்பு கல்வித் தேவைகள் மற்றும் குறைபாடுகள் (SEND) கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கியதாக மாற்ற பில்லியன் கணக்கான பவுண்டுகளை ஒதுக்க உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதில் மூன்று ஆண்டுகளில் £1.6 பில்லியன் பவுண்டுகள் நேரடியாகப் பாடசாலைகள் , முன்பருவக் கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே காலப்பகுதியில் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் (Speech and language therapists) போன்ற நிபுணர்களின் சேவையைப் பெற 1.8 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த புதிய நிதி ஒதுக்கீடு, SEND அமைப்பின் ஒரு முக்கிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து ஆசிரியர் சங்கங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.
பல ஆண்டுகால நிதிப் பற்றாக்குறையோடு ஒப்பிடும்போது, இந்தத் தொகை யானைப் பசிக்குச் சோளப்பொரி போன்றது (barely a drop in the bucket) என்று ஒரு சங்கம் விமர்சித்துள்ளது.
இதேவேளை, இது குறித்து , மூன்று ஆண்டுகளில் £1.6 பில்லியன் என்பது பெரிய தொகையாகத் தோன்றலாம், ஆனால் ஒரு கல்வி நிலையத்திற்கு என்று பார்த்தால் இது சில ஆயிரம் பவுண்டுகள் மட்டுமே எனவும் இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த அமைப்பையும் சீரமைக்க முடியும் என்பது வேடிக்கையானது எனவும் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் மேட் ராக் (Matt Wrack) கூறியுள்ளார்.
மேலும் இந்த மாற்றங்கள் மூலம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, தங்கள் வீட்டு வாசலிலேயே தகுந்த ஆதரவைப் பெறுவார்கள் எனவும் பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த அரசாங்கம் சரியானதைச் செய்யும் எனவும் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














