தெற்கு ஸ்காட்லாந்தின் (Moffat ) மொஃபாட் நகரின் ஊடாக காற்றாலை பாகங்களை ஏற்றிச் செல்லும் போது, போக்குவரத்தில் சுமார் 10 நிமிடங்கள் போன்ற மிகக் குறுகிய கால தாமதம் மட்டுமே ஏற்படும் என (Thrive Renewables ) ‘த்ரைவ் ரினியூவபிள்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான இறுதி வெள்ளோட்டம் (Trial run) இன்று நடைபெற்றது.
கடந்த 2021-ல் நடத்தப்பட்ட முதற்கட்ட வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து, தற்போது நீண்ட ட்ரெய்லர்களைக் கொண்ட லொறிகள் பாதையை எளிதாகக் கடக்க முடியுமா என்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஹாவிக் (Hawick) பகுதியில் ‘பைன்ஸ் பேர்ன்’ காற்றாலைத் திட்டத்திற்காக பாகங்கள் கொண்டு செல்லப்பட்டபோது, மோசமான வானிலை, வாகனப் பழுது மற்றும் பிற காரணங்களால் பெரும் போக்குவரத்து நெரிசலும் பாதிப்புகளும் ஏற்பட்டன.
இதனால் மொஃபாட் நகர மக்களும் அச்சமடைந்திருந்தனர். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் ஹாவிக் பகுதியில் பயன்படுத்தப்பட்டவை போன்றது அல்ல என்றும், இவை வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படாது என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று வெள்ளோட்டம் இடம்பெற்ற நிலையில் உண்மையான பாகங்கள் கொண்டு செல்லும் பணி மார்ச் மாத இறுதியில் தொடங்கும்.
பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க, பொலிஸ் பாதுகாப்புடன் இரவு 8:30 முதல் 9:00 மணி வரையிலான நேரங்களில் மட்டுமே இப்பயணங்கள் மேற்கொள்ளப்படும்.
நகரில் சாலை மூடல்கள் எதுவும் இருக்காது என்றும், வாகன அணிவகுப்பு கடந்து செல்லும் போது பொலிஸார் போக்குவரத்தை சிறிது நேரம் நிறுத்தி வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் சமூகத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஆண்டுதோறும் 285,000 பவுண்டுகள் சமூக நல நிதியாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், காற்றாலை அமைந்துள்ள பகுதியில் புதிய நடைபாதைகளையும் (River Tweed Trail) நிறுவனம் உருவாக்கித் தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













