பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பொது அலுவலகத்தில் முறையற்ற நடத்தை (Misconduct in public office) புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த வியாழக்கிழமை அவரது 66-வது பிறந்தநாள் அன்று ( Norfolk ) நோர்போக்கில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Berkshire) பெர்க்சையரில் உள்ள அவரது ‘ரோயல் லாட்ஜ்’ (Royal Lodge) இல்லத்தில் (Thames Valley) தேம்ஸ் வேலி பொலிஸார் மேற்கொண்ட சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 முதல் 2011 வரையிலான காலப்பகுதியில் பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக (Trade Envoy) ஆண்ட்ரூ பணியாற்றியபோது, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டாரா என்பது குறித்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
சுமார் 11 மணிநேரக் காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், எப்ஸ்டீன் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இதற்கிடையில், ஆண்ட்ரூ வர்த்தகத் தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆண்ட்ரூ அதிகாரத்தைத் தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்தியதாக வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Sir Chris Bryant) குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானிய அரச வாரிசு வரிசையிலிருந்து (Line of succession) ஆண்ட்ரூவை நீக்கும் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த மாற்றத்தைச் செய்வதற்கு பிரித்தானிய மன்னரைத் தலைவராகக் கொண்ட 15 பொதுநலவாய நாடுகளின் (Commonwealth realms) சம்மதம் தேவைப்படுகிறது.
தற்போது வரை இரண்டு நாடுகள் மட்டுமே இதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், இது குறித்த விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்துள்ளன.















