மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இன்று ஜெனீவாவில் மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
2003-ஆம் ஆண்டு ஈராக் மீதான படையெடுப்பிற்குப் பின்னர் தற்போதுதான் அமெரிக்கா தனது மிகப்பெரிய இராணுவ பலத்தை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது.
இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட பெரும் கடற்படை மற்றும் ஆயிரக்கணக்கான துருப்புகளை அமெரிக்கா அங்கு அனுப்பியுள்ளது.
மறுபுறம், தாக்குதல் நடத்தப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் சூளுரைத்துள்ளது.
இந்தச் சூழலில், போர் ஏற்படுவதைத் தடுப்பதற்கான கடைசி முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை கருதப்படுகிறது.
அண்மையில் ஆற்றிய உரையில், ஈரான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளி என்றும், அது அணு ஆயுதம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஆனால், ஈரான் தனது நாட்டில் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த முடியாது என மறுத்துள்ள போதிலும், தனது அணுசக்தித் திட்டம் குறித்து சில சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பால் உணர்த்தியுள்ளது.
இதேவேளை, ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், ஈரானியக் குழுவிற்கு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தலைமை தாங்குகிறார்.
அமெரிக்கத் தரப்பில் (Jared Kushner) ஜாரெட் குஷ்னர் மற்றும் (Steve Witkoff ) ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கியுள்ள தடைகளை நீக்குதல் ஆகிய விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














