ஹட்டன் ருவன்புர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் பலத்த காயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ருவான்புர பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.குறித்த மோதலில் காயமடைந்தவர்கள் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் உயிரிழந்தவரின் சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, கடந்த 24ஆம் திகதி முதல் இரு தரப்பினருக்கும் இடையே பலமுறை வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தர்க்கம் மோதலாக மாறியதினாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது













