அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஓரங்கமாக கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி. எம் .பளீல் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, இன்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் ஒருங்கிணைப்பில் பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது ‘விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’- அகன்று செல்’ எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன
மேலும் அரச அலுவலகங்கள், மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த வாரம் முழுவதும் தொடரும் இந்தப் பிரச்சாரத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்பதன் மூலம், நம் பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற சூழலாக மாற்ற முடியும்.போதை ஒழிப்பு – நமது பொறுப்பு!இளைஞர்களைப் பாதுகாப்போம்! சமூகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மார்ச் மாதம் 01 முதல் ‘முழு நாடும் ஒன்றாக, தேசிய செயல்’ திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.


















