1991 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான அணி, ஈராக்கிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை முன்னெடுத்தது.42நாட்கள் நடந்த இந்தப் படை நடவடிக்கைக்கு அவர்கள் “ஓபரேஷன் டிசர்ட் ஸ்ரோம் -பாலைவன புயல்” என்று பெயர் வைத்தார்கள்.குவைத் நாட்டுக்குள் புகுந்த ஈராக்கிய படைகளை அங்கிருந்து அகற்றுவது அந்தப் படை நடவடிக்கையின் நோக்கம்.
இதுதொடர்பாக அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்தியவர் ஆய்வுரை முழுவதிலும் “மத்திய கிழக்கு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அப்பொழுது அங்கே பார்வையாளராக வந்திருந்த புத்திஜீவி ஒருவர்-பௌதீகவியலைத் தனது அறிவியல் ஒழுக்கமாகக் கொண்டவர்- உரை நிகழ்த்தியவரிடம் கேட்டார், “ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கிறீர்கள்? அது எங்களுக்கு மத்திய கிழக்கு இல்லைத்தானே? அப்படி என்றால் உங்களுடைய ஆய்வு எந்த நோக்கு நிலையிலிருந்து மேற்கொள்ளப்பட்டது? என்று.
அந்தக் கேள்வி மிக ஆழமானது. மத்திய கிழக்கு என்பது பிரித்தானிய குடியேற்றவாத காலத்தில்,குடியேற்றவாத நோக்கு நிலையில் இருந்து பிரித்தானிய குடியேற்றவாத அதிகாரி ஒருவரால் 1850ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும். பிரித்தானியாவின் நோக்கு நிலையில் இருந்து கிழக்கை அவர்கள் தூரகிழக்கு(Far East),அண்மை கிழக்கு(Near East), மத்திய கிழக்கு(Middle East) என்று பிரித்தார்கள். பின்னர் அந்த வார்த்தை அமெரிக்கரும் கடல்சார் மூலோபாய ஆராய்ச்சியாளரும் ஆகிய அல்பிரட் தாயர் மாகன் என்பவரால் ஆய்வு நோக்குநிலையில் இருந்து 1902இல் பயன்படுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டது.
ஆனால் அது பிரித்தானிய கொலோனியல் நோக்கு நிலையில்-குடியேற்றவாத நோக்க நிலையில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்பதனால் அதை நிராகரித்து இந்தியாவின் முதலாவது பிரதமர் ஆகிய ஜவஹர்லால் நேரு மேற்காசியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.ஆசிய நோக்கு நிலையிலிருந்து அது ஆசியாவின் மேற்கே காணப்படுவதனால் அவ்வாறு அவர் அழைத்தார்.
எனவே அதை மத்திய கிழக்கு என்று அழைப்பதா அல்லது மேற்காசியா என்று அழைப்பதா என்பது அரசறிவியல் ஒழுக்கத்தின்படி எந்த மையத்திலிருந்து அந்தப் பிராந்தியத்தை நாங்கள் நோக்குகிறோம் என்பதைக் குறிக்கும்.எமது அரசியல் நோக்குநிலை எது என்பதை அது காட்டும்.
அரசியலில் வார்த்தைகள் முக்கியமானவை.குறிப்பாக அரசியல்,சட்ட ஆவணங்களில் வார்த்தைகளுக்கு வழங்கப்படும் வியாக்கியானம் மிகவும் முக்கியமானது.அதனால்தான் லேபிள் இல்லாத சமஸ்ரியை தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றார்கள்.எக்கிய ராஜ்ய என்ற வார்த்தை விவாதப் பொருள் ஆகியது.
இந்திய தத்துவஞானி ஆகிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி “வார்த்தைகளில் ஒன்றுமில்லை” என்று கூறுவார்.அதேசமயம் வார்த்தைகள் “அர்த்தங்களால் சுமை ஏற்றப்படுகின்றன” என்றும் கூறுவார்.வார்த்தைகள் அவற்றை உருவாக்குபவர்கள் அல்லது பயன்படுத்துபவர்களின் நோக்கு நிலையில் இருந்து வெவ்வேறு அர்த்தப் பரிமாணங்களைக் கொண்டிருக்கும்.
இப்பொழுது நிகழ்காலத்துக்கு வருவோம். ஈராக்குக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடுத்திருக்கும் போர் நடவடிக்கை தொடர்பாக உரையாடுகின்ற பலரும் மத்திய கிழக்கு என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தக் காணலாம். ஆசியர்கள் ஆகிய நாம் அதனை ஆசிய நோக்கு நிலையில் இருந்து மேற்காசியா என்று அழைப்பதுதான் பொருத்தமானது.
இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த போரில் ஆசிரியர்கள் ஆகிய நாம் யாருடைய பக்கம் நிற்க வேண்டும்? சண்டையிடும் நாடுகளில் இரண்டு ஆசிய நாடுகள். ஒன்று அமெரிக்க கண்டம். எனவே இரண்டு ஆசிய நாடுகள் பொருதும் ஒரு களத்தில், ஆசியாவில் வாழும் சிறிய அரசில்லாத தமிழ் மக்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கலாம்?
தமிழ் மக்களின் முடிவு இந்த போரில் தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்று சிலர் கேள்வி கேட்கக்கூடும். பிரச்சினை என்னவென்றால், தன்னைச்சுற்றி நிகழும் எல்லா திருப்பகரமான நிகழ்வுகள் குறித்தும் ஒரு மக்கள் கூட்டம் குறிப்பாக விடுதலைக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் தனக்கென்று சொந்த நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.அந்த அடிப்படையில் நீதிக்காகப் போராடும் தமிழ் மக்கள் இந்தப் போரில் யாருடைய பக்கம் நிற்க வேண்டும்?
அறம்,நீதி நியாயங்களின் அடிப்படையில் சிந்திக்கும் தமிழர்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் ஈரானியர்களின் பக்கம்தான் தமிழர்கள் நிற்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
அதேசமயம் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் ஈரானின் பக்கம் நிற்பதற்குத் தயாரில்லை. ஏனென்றால் இறுதிக்கட்டப் போரில் ஈரான் அரசாங்கத்தின் பக்கம் நின்றது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இங்கே ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். இறுதிக்கட்டப் போரில் ஈரான் மட்டுமல்ல,பாகிஸ்தான் மட்டுமல்ல,இஸ்ரேல் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் தமிழ் மக்களுக்கு எதிராகத்தான் நின்றன. ஆதரவாக நிற்பதுபோல தோன்றிய சில ஐரோப்பிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும்கூட இன அழிப்பிலிருந்து தமிழ் மக்களை காப்பதற்கான நிர்ணயகரமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.உலகப் பெருமன்றம் ஆகிய ஐநாவுந்தான்.
கடந்த 16 ஆண்டுகளாக, ஐநாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகையில் அரபு நாடுகள் மட்டுமல்ல சுதந்திரத்துக்காகப் போராடி வெற்றி பெற்ற கியூபா, எரித்திரியா, வியட்நாம் போன்ற நாடுகளும் அரசாங்கத்தின் பக்கந்தான் நிற்கின்றன.எனவே இங்கு முக்கியமாகக் கேட்கப்பட வேண்டிய கேள்வி, எந்த அடிப்படையில் இந்த நாடுகள் இலங்கை அரசாங்கத்தோடு நிற்கின்றன?அல்லது ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிற்கின்றன? என்பதுதான்.
விடை அதிகம் சிக்கலானது அல்ல.அது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவு. அரசுகள் அரசுகளை பாதுகாக்கின்றன.அரசுக்கும் அரசுக்கும் இடையிலான நிலையான நலன்களின் அடிப்படையில் அந்த உறவு அமைகிறது. அரசுகள் தங்களுடைய ராணுவப் பொருளாதார அரசியல் நோக்கு நிலைகளில் இருந்து அந்த முடிவை எடுக்கின்றன.அங்கே அறம் நீதி எதுவும் கிடையாது. அவை யாவும் அம்புலிமாமா கதைகளில்தான் உண்டு.
இந்த அடிப்படையில் கூறின் உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளின் கைகளிலும் தமிழ் மக்களுடைய ரத்தம் உண்டு. சிறிய அரசுகளின் கைகளிலும் உண்டு. 400 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசர் தமிழ் மக்களின் அரசைத் தோற்கடித்தார்கள். அங்கிருந்து தொடங்கி எல்லா குடியேற்றவாத நாடுகளும் தமிழ் மக்களின் அரசை இல்லாமல் செய்தன.தமிழ் மக்கள் சுதந்திரத்துக்காக போராடத் தொடங்கியபோது முதலாம் கட்ட ஈழப்போரில் மேற்கு நாடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக நின்றன. இந்தியா அப்பொழுது தமிழ் மக்களோடு நின்றது. இரண்டாம் கட்ட ஈழப் போரில் இந்தியா தமிழ் மக்களுக்கு எதிராகத் திரும்பியது. மூன்றாவது,நாலாவது கட்ட ஈழப் போர்களில் உலகில் பெரும்பாலான நாடுகள் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தோடுதான் நின்றனன். இங்கே எந்த நாடு தமிழ் மக்களோடு நிற்கிறது அல்லது எதிராக நிற்கிறது என்பது, அந்த நாட்டுக்கு தமிழ் மக்கள் மீதுள்ள காதல் பாசம் என்பவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை.பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நோக்கு நிலைகளில் இருந்து நமது நிலையான நலன்கள் தேவைகளின் அடிப்படையில் அரசுகள் தமிழ் மக்களை ஆதரிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்கின்றன.
குறிப்பாக தமிழ் மக்கள் அரசு இல்லாத தரப்பாக இருப்பதனால் அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்களைதான் நாடுகள் கட்டமைப்பு சார்ந்து கையாளும். அதாவது கொழுப்பைக் கையாள்வது.கொழும்பைக் கையாள முடியாது போகும்போது தமிழ் மக்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கொழும்பை வழிக்குக் கொண்டு வருவது. இந்த அடிப்படையில்தான் ஈழத் தமிழர்களுக்கும் உலக சமூகத்திற்கும் இடையிலான உறவு பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.இனிமேலும் தீர்மானிக்கப்படும்.கொழும்பைப் பகைத்துக் கொண்டு ஈழத் தமிழர்களை ஆதரிப்பதற்கு குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு இந்த பிராந்தியத்தில் புவிசார் அரசியல் நோக்கு நிலையில் இருந்து தேவை இருக்க வேண்டும். தேவை இல்லையென்றால் அந்த நாடு அரசுக்கும் அரசுக்கும் இடையிலான பாரம்பரியமான உறவு முறையைத்தான் கடைப்பிடிக்கும்.
அந்த அடிப்படையில்தான் வெளி அரசுகள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற முடிவை எடுக்கின்றன.இங்கே அறம் நீதி என்பவை கிடையாது. நிலையான அரசியல்,ராணுவ, பொருளாதார நலன்கள் மட்டும் தான் உண்டு. எனவே ஈழத் தமிழர்களும் நீதிக்கான தமது போராட்டத்தின் நோக்குநிலையில் இருந்துதான் வெளி அரசுகளோடு உறவுகளை வைத்துக் கொள்ளலாம். அப்பாவித்தனமாக நீதி நியாயங்களின் அடிப்படையில் அல்ல.
இக்கட்டுரையை சொற்களின் அர்த்தங்களில் இருந்து தொடங்கியதுபோல, முடிக்கும் போதும் அதுதொடர்பாக அமெரிக்க எழுத்தாளரான ஏர்ணஸ்ற் ஹெமிங்வே எழுதிய கருத்தைக் கூறி முடிக்கலாம். ஹெமிங்வே எழுதிய “A farewell to Arms” (1929) – “போரே நீ போ” என்ற நாவல் உலகப் பிரபல்யமானது. முதலாம் உலகப் போர்ச் சூழலுக்குள் சிக்கிய இளம் தம்பதி ஒன்றின் கதை அது. அந்த நாவலின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகன் பின்வரும் பொருள்படக் கூறுவான்.. “சில வார்த்தைகள் இப்பொழுது புனிதமிழந்துவிட்டன. சமாதானம், யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை.. போன்ற வார்த்தைகளுக்குப் பொருளே இல்லை. புனிதமும் இல்லை. இதில் பொருள் கெடாமலிருக்கும் வார்த்தைகள் எவை என்று பார்த்தால்,படைப்பிரிவின் பெயர்கள,ரெஜிமென்ட்களின் பெயர்கள்,வீதிகளின் பெயர்கள் மட்டுந்தான்”.
முதலாம் உலகப் போருக்குப் பின் அந்த அமெரிக்க எழுத்தாளர் கூறியது இப்பொழுதும் பொருந்துகிறது என்பதுதான் மனித குலத்தின் துயரம்.












