பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் குமார எனும் பூசகரின் வங்கிக் கணக்குகள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாடு இன்று (21) கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கருத்திடுகையில்,
சந்தேகநபரான பூசகரின் வங்கிக் கணக்குகளில் 30 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ‘லொக்கு பெட்டி’ என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளதாகவும், அவர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைச் சலவை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.













