கென்ட் (Kent) பகுதியில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் பி (Meningitis B) தொற்றினால் 18 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்துமாறு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கென்ட் பகுதியில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் பி தொற்றினால் கடந்த வாரம் உயிரிழந்த இருவரில் 18 வயதான ஜூலியட் கென்னியும் (Juliette Kenny) ஒருவர்.
மற்றையவர் கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் ஆவார்.
மிகவும் ஆரோக்கியமாக இருந்த தனது மகள், அறிகுறிகள் தெரிந்த ஒரே நாளில் உயிரிழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு என அவரது தந்தை மைக்கேல் கென்னி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை 27 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகிக்கும் வகையில் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இந்தத் தொற்று பரவுவதற்கு ஆதாரமாகக் கருதப்படும் கேன்டர்பரியில் உள்ள ‘கிளப் கெமிஸ்ட்ரி’ (Club Chemistry) இரவு விடுதிக்கு மார்ச் 5 முதல் 15 வரை சென்ற அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மெனிஞ்சைடிஸ் பி தடுப்பூசித் திட்டம் 2015-ல்தான் அறிமுகப்படுத்தப்பட்டதால், தற்போது பல்கலைக்கழகங்களில் படிக்கும் பல இளைஞர்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் நிலையில், அனைத்து இளைஞர்களுக்கும் இந்தத் தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஜூலியட்டின் குடும்பத்தினரும் ‘மெனிஞ்சைடிஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையும்’ வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் இத்தகைய மரணங்களைத் தவிர்க்க, தேசிய சுகாதார சேவை இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தடுப்பூசி மையங்களில் மாணவர்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று தடுப்பூசி பெற்று வருகின்றனர்.
இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றிலும் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அது கேன்டர்பரி பரவலுடன் நேரடியாகத் தொடர்புடையது எனத் தெரியவந்துள்ளது.
இந்தத் தொற்று பரவல் மிகவும் வேகமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் ஐக்கிய இராச்சிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) எச்சரிக்கை விடுத்துள்ளது.












