இணையம் வழியாக மோசடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டினர் குழு ஒன்று நேற்றைய (24) தினம் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, 9 சந்தேக நபர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து இணையவழி மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக போப்பே, போத்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கணினி, ஒரு மடிக்கணினி மற்றும் 84 மொபைல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பூசா இராணுவப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், காலி பொலிஸ் அதிகாரிகள் குழு இந்தச் சோதனையை நடத்தியது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போத்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போத்தலை பொலிஸார் சந்தேக நபர்களை காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.












