நாட்டை பாதிக்கும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் (04) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம், நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைக் காலத்தை 24 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை நேற்று (03) அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக பாதுக்கை, ஹோமகமை, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நீர் வெட்டுகள் அமுல்படுத்தப்படும்.
இதற்கு அமைவாக முதற்கட்டத்தின் கீழ், பாதுக்கை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் நேற்று பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
ஹோமாகமை பகுதியில் நேற்று (03) இரவு 8.00 மணி முதல் இன்று (04) பிற்பகல் 2.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
பெலன்வத்தை பகுதியில் இன்று (04) இரவு 8.00 மணி முதல் நாளை அதாவது ஏப்ரல் 5 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுக்கை, ஹோமாகமை மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
எவ்வாறெனினும், நீர்வெட்டு அமுல்படுத்தப்படாத நாட்களில் தடையின்றி நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத் தடை தொடர்பான மேலதிக தகவல்களை 1939 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.












