சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு (05) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 43 ஓட்டங்களினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியானது நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரஜத் பட்டிதர் தலைமையிலான அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றியாகும்.
அதேநேரம், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியக பெற்றுக் கொண்ட மூன்றாவது தோல்வியாகும்.
நேற்றைய போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும் 5 முறை சம்பியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தில் ஒரு மாபெரும் உலக சாதனையை படைத்தது.
251 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டியடித்த போட்டியில் ஆயுஷ் மத்ரே மற்றும் மேட் ஹென்றி ஆகியோரைத் தவிர சென்னை அணியின் ஏனைய ஒன்பது துடுப்பாட்ட வீரர்களும் குறைந்தபட்சம் ஒரு சிக்ஸரையாவது அடித்தனர்.
ஒரு டி:20 இன்னிங்ஸில் ஒன்பது துடுப்பாட்ட வீரர்கள் சிக்ஸர் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒட்டுமொத்தமாக ஐந்து முறை ஐபிஎல் கிண்ணத்தை வென்ற அணி தங்களது இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களை அடித்தது.
இதற்கு மாறாக, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது அதிரடியான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களை குவித்து 19 சிக்ஸர்களை அடித்திருந்தது.
இந்த இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவிப்பதற்கு பெங்களூரு அணியின் 5 வீரர்கள் பிரதான கர்த்தாவாக அமைந்தனர்.
இதில் டிம் டேவிட் மற்றும் ரஜத் பட்டிதர் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர்.

டிம் டேவிட் மூன்று பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் வெறும் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை குவித்து சென்னை அணியின் வலுவற்ற பந்து வீச்சாளர்களை சிதறித்தார்.
அதே நேரத்தில் ரஜத் பட்டிதரும் 19 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இவர்கள் தவிர தேவதத் படிக்கல் 50 (29) ஓட்டங்களையும், பிலிப் சால்ட் 46 (30) ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது எடுத்தனர்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது.
சென்னை அணி சார்பில் அதிகபடியாக சர்பராஸ் கான் 50 (25) ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியானது பெங்களூரு அணியை புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு கொண்டு சேர்த்தது.
அதேநேரம், சென்னை அணி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக டிம் டேவிட் தெரிவானார்.














