செவ்வாய்க்கிழமை அன்று தான் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஒரு உடன்பாட்டை எட்டாமலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காமலும் இருந்தால், ஈரான் மீது கடும் கடும் தாக்குதலை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தினார்.
அதேவேளையில், ஈரானின் உட்பகுதியில் இருந்து மிகுந்த ஆபத்து நிறைந்த ஒரு மீட்புப் பணியில் விமானப்படை வீரர் ஒருவரை மீட்ட அமெரிக்க சிறப்புப் படைகளையும் அவர் பாராட்டினார்.
ஈரானின் அணு ஆயுத மேம்பாட்டுத் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணைக் கிடங்கு மற்றும் பிராந்திய மறைமுகப் போராளிக் குழுக்களுக்கான ஆதரவு ஆகியவற்றால் ஏற்படும் உடனடி அச்சுறுத்தல் என்று தாங்கள் கருதியதை அழிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐந்து வாரங்களுக்கும் மேலாக ஏவுகணைகள், வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானைத் தாக்கி வருகின்றன.
பதிலுக்கு, உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கிற்கான வழித்தடமான ஹார்முஸ் நீர்வழியை தெஹ்ரான் திறம்பட மூடியுள்ளதுடன், வளைகுடாவைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பிற இலக்குகளையும் தாக்கியுள்ளது.
இன்று (06) காலை தெஹ்ரானில் வெடிப்புகள் நிகழ்ந்தன.
மேலும், நகரின் தெற்கே உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லபபட்டதாக ஒரு அதிகாரி ஈரானிய அரசு ஊடகத்திடம் தெரிவித்தார்.
இதேவேளை, தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இட்ட பதிவொன்றில், ஈரானிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தினார்.
இது ஒரு போர்க்குற்றமாக அமையும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆதரவாளர்கள், எதிரிகள் மற்றும் நிதிச் சந்தைகள் என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள முரண்பட்ட செய்திகளுக்கு மத்தியில், ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திங்கட்கிழமைக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சாத்தியமான 45 நாள் போர்நிறுத்தத்தின் நிபந்தனைகள் குறித்து அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாக, பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த நான்கு அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டனது.
மத்தியஸ்தர்கள் இரண்டு கட்ட ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது.
முதல் கட்டமாக 45 நாள் போர் நிறுத்தம்; இரண்டாம் கட்டமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஆகியவை அமையும்.
எனினும், இது தொடர்பில் வெள்ளை மாளிகையும் அமெரிக்க வெளியுறவுத் துறையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.













