‘யுனிவர்சல் கிரெடிட்’ திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் உதவித்தொகைக்கான இரண்டு குழந்தைகள் என்ற உச்சவரம்பு இன்று (06) அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த கொள்கை மாற்றத்தின் மூலம் சுமார் 450,000 குழந்தைகள் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் கன்சர்வேடிவ் கட்சியினரால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பெரும்பாலான குடும்பங்களில் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே குழந்தை வரிச் சலுகை மற்றும் நிதி உதவியை வழங்கியது.
இந்த நிலையில், தொழிலாளர் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களின் பல மாத கால அழுத்தத்திற்குப் பின்னர் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் கடந்த நவம்பரில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி இந்த இரண்டு குழந்தைகள் என்ற உச்சவரம்பு நீக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அந்த அறிவிப்புக்கு அமைவாக இரண்டு குழந்தைகள் என்ற உச்சவரம்பு இன்று முடிவுக்கு வந்ததுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கத்தின் பல கொள்கைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.
குறிப்பாக அண்மைய வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ் தந்தைவழி விடுப்பில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஊழியர் ஒருவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்தே தந்தைவழி விடுப்பு எடுக்கத் தகுதி பெறுவார்கள்.
இது தவிர அரசு ஓய்வூதிய உயர்வு, வீட்டு வாடகை உதவித்தொகை மற்றும் தனிநபர் சுதந்திர உதவித்தொகை போன்றவையும் இந்தக் கொள்கைகளுள் அடங்கும்.












