அபெர்டீன்ஷயர் (Aberdeenshire) பகுதியில் இரவு நேரத்தில் வீதியில் விழுந்து கிடந்த நபர் மீது காரை மோதி மரணத்தை ஏற்படுத்திய இளைஞர் ஒருவருக்கு, சமூக சேவை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் திகதி அதிகாலை நேரத்தில், நியூமச்சார் (Newmachar) பகுதியிலுள்ள A947 வீதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அதிக மதுபோதையில் இருந்த 28 வயதுடைய கலம் ரே (Calum Rae) என்பவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.
இதன்போது அந்த வழியாக அதிவேகமாக காரை செலுத்தி வந்த 25 வயதுடைய ஆண்ட்ரூ வெப்ஸ்டர் (Andrew Webster), அவர் மீது காரை மோதியதில் வீதியில் கிடந்த கலம் ரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அபெர்டீன் ஷெரிப் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சாரதி வெப்ஸ்டர் கவனக்குறைவாகவும் அதிவேகமாகவும் காரை ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.
இதேவேளை வீதியில் ஒரு கறுப்பு நிறப் பொருள் கிடப்பதைக் கவனித்த போதிலும், அது ஒரு மனிதர் என்பதை அவர் உணரவில்லை என்றும், மோதிய பின்னரே கடும் அதிர்ச்சியுடன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காரை உரிய வேகத்தில் ஓட்டி வந்திருந்தால், வீதியில் கிடந்த நபர் மீது மோதாமல் தவித்திருக்க முடியும் என அரச தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
அதேவேளை, இந்தச் சம்பவத்தால் தான் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், குற்ற உணர்வு வாட்டுவதாகவும் சாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக வெப்ஸ்டருக்கு
140 மணிநேரம் ஊதியமற்ற சமூக சேவைப் பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் 2 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதித்தும் தண்டனை வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து உயிரிழந்த கலம் ரேயின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். “இந்தத் தண்டனை எமது இழப்பையோ அல்லது கலம் ரேயின் உயிரின் மதிப்பையோ ஈடு செய்யவில்லை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த நீண்ட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்ததை ஒரு நிம்மதியாகக் கருதுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.













