இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய ராஜு’ என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (18) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், குறித்த சந்தேகநபருக்கு எதிராக இலங்கையிலுள்ள நீதிமன்றங்களால் 15 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, 26 வெளிநாட்டுப் பயணத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்றார். மீட்டியாகொட, கரன்தெனிய, பலப்பிட்டிய மற்றும் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள், பாரிய காயங்களை ஏற்படுத்தியமை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்காக இவர் தேடப்பட்டு வந்தவராவார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் நேரடி மேற்பார்வையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 81 டி-56 ரக துப்பாக்கிகள், 107 கைத்துப்பாக்கிகள் மற்றும் 76 ரிவோல்வர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2024 முதல் 2026 வரை சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 32 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் சர்வதேச ஒத்துழைப்புடன் அழைத்து வரப்படவுள்ளதுடன், சர்வதேசக் காவலில் உள்ள 8 பேரை விரைவில் நாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் 94 சிவப்பு அறிவித்தல்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் இதுவரை 30 இலட்சத்து 11,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1,873 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2026 ஆம் ஆண்டில் மாத்திரம் 44,587 பிடியாணையாக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 31,796 சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 30 முதல் இன்றுவரை 1,579 கிலோ 616 கிராம் ஹெரோயின், 1,975 கிலோ 970 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 5,115 கிலோ 716 கிராம் கஞ்சா ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.













